Friday, September 9, 2011

ராஜீவ் கொலை செய்யப்பட்டார் ??? யாருக்காக

யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு2009 வரை விடை கிடைக்கவில்லை.நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம்

பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது. 1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.

ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம். இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் ‘முன் ஜோடிப்பு கதைகளை’ போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ‘நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூட சவால் விட்டார். இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை,ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.

13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார்.’அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை?சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

21. சிவராசன், தணு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?

22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?

29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?

30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச்,பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.

32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?

33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?

34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?

36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?

37. தணு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?

38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?

39. தணு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?

40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?

42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?

43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு? தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது. கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து. விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்

நவம்பர் 19, 1997-ல் தமிழன் எக்ஸ்பிரசில் சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவரது தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் ராஜீவ் கொலை தொடர்பான பல கோப்புகள் ‘மாயமாய்’ மறைந்து போயின. “அய்யோ, இளம் தலைவரை கொன்றுவிட்டார்களே” என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் காங்கிரசார், ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்

என்பதில், எந்த கவலையோ, அக்கறையோ காட்டியதில்லை. ‘கோப்புகள் காணாமல் போய் விட்டது’ என்று கூறி, அதிலே அடங்கியிருந்த பல உண்மைகள் வெளியே வந்து விடக் கூடாது என்று காங்கிரஸ் ஆட்சி மூடி மறைத்தது. சர்வதேச ஆயுத வியாபாரிகளிடம் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, ராஜீவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் கருதப்படும் தனது நெருக்கமான நண்பரான சந்திரசாமியைக் காப்பாற்றவே நரசிம்மராவ் இந்தக் கோப்புகளை அழித்தார் என்று ‘அய்.பி.’ மற்றும் ‘ரா’ உளவுத் துறை அதிகாரிகள், ஒப்புக் கொள்வதாக ‘அவுட் லுக்’ பத்திரிகை (24.11.1997) எழுதியது.

கோப்புகளை அழித்தது மட்டுமல்ல, கோப்பு களையே திருத்தியும் எழுதினார்கள். அரசுக் கோப்பு களை இப்படி திருத்துவது சட்டப்படி குற்றம். ஆனால், நரசிம்மராவ் ஆட்சியில், அதுவும் நடந்தது. அதற்கு உடந்தையாக செயல்பட்டவர் யார் என்பது தான் வியப்புக்குரியது. முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோர் கருணை மனுக்களை நிராகரித்து தூக்கில் போடுவதற்கு பரிந்துரை செய்த, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தான், கோப்பைத திருத்து வதற்கு துணை நின்றவர். ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவை செயலாளராக இருந்த வினோத் பான்டே என்ற அதிகாரி, ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளிக்க வந்தார். அவரிடம், ராஜீவ் பாதுகாப்பு தொடர்பான ஒரு கோப்பைக் காட்டி, “இது நீங்கள் எழுதியது தானே” என்று சாட்சியத்தின் போது கேட்டார்கள். கோப்பைப் படித்துப் பார்த்த அந்த அதிகாரி திடுக்கிட்டுப் போனார். “ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பற்றி நான் எழுதிய குறிப்புகள், இந்தக் கோப்பில் திருத்தப்பட்டுள்ளன” என்று நேரடியாகவே அவர் குற்றம் சாட்டினார். ஜெயின் ஆணையம், உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது. அப்போது உள்துறை இணை அமைச்சர் ப. சிதம்பரம், “ஆமாம், உண்மைதான். வினோத் பாண்டே எழுதிய கோப்பு காணாமல் போய் விட்டதால், அதைத் தேட முடியாததால், நாங்களே புதிதாக ஒரு கோப்பை தயாரித்தது உண்மைதான்” என்று ஜெயின் ஆணையத்திடம் ப. சிதம்பரம் ஒப்புக் கொண்டார். (அவுட் லுக் 24.11.1997)

கோப்புகள் திருத்தப்பட்டது மட்டுமல்ல, கோப்புகள் தொலைக்கப்பட்டதும் உண்டு. இராஜீவ் மரண விசாரணையில் அவ்வளவு ‘கவலை’ எடுத்துச் செயல்பட்டனர் அதிகாரிகள். $குமார் என்ற சி.பி.அய். அதிகாரி, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்றார். இலண்டன் வழியாக இந்தியாவுக்கு திரும்பும்போது, இலண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில், இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டிருந்த அவரது கைப் பெட்டி காணாமல் போய்விட்டது. வெளிநாடு களுக்கு சென்று வழக்கு விசாணை தொடர்பாக தகவல்களடங்கிய ஆவணங்களை விமான நிலையத் திலிருந்து திருடிச் சென்றது யார்? ஏன் திருடிச் செல்ல வேண்டும்? திருட்டு, அந்த அதிகாரிக்கு தெரியாமல் நடந்ததா? அல்லது திருட்டுக்கு அவரும் உடந்தையா? இவ்வளவுக்கும் பிறகு, அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு புலனாய்வுத் துறையிடமிருந்து பதிலே இல்லை. ஹீத்துரு நகரிலுள்ள காவல் நிலையத்தில் ஒரு புகாரை மட்டும் பதிவு செய்து விட்டு $குமார், இந்தியா திரும்பி விட்டார்.

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை வெளிப் படையாக நடத்தப்படவில்லை. காந்தி கொலை வழக்கு விசாரணை, இந்திரா கொலை வழக்கு விசாரணை வெளிப்படையாக – பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் முன் நடத்தப்பட்டன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை ரகசியமாகவே நடத்தப்பட்டது. அதுவும் கறுப்புச் சட்டமான ‘தடா’ சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டு, அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்கு மூலங்கள் பெறப்பட்டன. அந்த ஒப்புதல் வாக்கு மூலங்களே குற்றத்துக்கான சாட்சிகளாக மாற்றப்பட்டன. தற்போது தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ள பேரறிவாளன், தனக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை ‘தடா’ நீதிமன்றத்திலேயே மனுவாகத் தந்துள்ளார். (11.2.1992) கொடூரமான அந்த சித்திரவதைகளை விரிவாக இங்கே எழுதிட இயலாது என்பதால் உதாரணத்துக்கு ஒரு சிறு பகுதி:

“ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்) அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்து வது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூற வேண்டும். அவை கூறுவதற்கும் கூசக் கூடியவை என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகைச் சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவருடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவருக்கு அதாவது 1800 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிட முடியாததாக இருந்தது.

ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷூ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இது போன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மைத் துன்புறுத்து வதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒரு நாள் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிலிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடது பக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ‘ஏண்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்?’ என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே, ‘இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான்’ என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பிவிட்டனர்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார் என்றும் அறியாமல் யாரை யாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி, குற்ற வாளிகளாக்கி, பெயரெடுக்கும் மனப்பான்மை யோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.”

(நூல்: தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்)

ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடும் ராபர்ட் பயாஸ் எழுதியுள்ள “விடுதலைக்கு விலங்கு” எனும் நூலில் தனக்கு இழைக்கப்பட்ட பல்வேறு சித்திரவதைகளை விவரித்துள்ளார். அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்கிறோம்.

“எங்களை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தண்டனை முறைகளைப் பற்றிக் கடுமையாக ஆராய்ச்சி செய்து தேர்ந்த நிபுணர்களாக இருந்தனர். இது போன்ற துன்புறுத்தலான விசாரணை முறைகளுக்குக் காவல்துறையினர் பிரத்தியேகப் பயிற்சி எடுக்கிறார்கள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் எப்படி விதவிதமாக துன்புறத்தலாம் என்பதற்குப் பயிற்சிகள். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. காலை நீட்டி வைத்து குதிகாலில் லத்தியால் அடித்ததால், கொஞ்ச நேரத்தில் எனக்கு குதிகாலில் இரத்தம் கட்டுவது போல இருந்தது. அப்படி இரத்தம் கட்டிவிட்டால் கால் பெரிதாக வீங்கிவிடும். கால் பெரிதாக வீங்கிவிட்டால் என்னை மீண்டும் துன்புறுத்த இயலாது என்பதை புரிந்து வைத்துக் கொண்டு, கொஞ்ச நேரம் என்னைக் குதிக்கச் சொன்னார்கள், பிறகு மீண்டும் அடித்தார்கள். இவ்வாறு என் மீதான துன்புறுத்தல்கள் நிகழ்ந்து கொண் டிருந்தபோது, அதிகாரி இரமேஷ் என்னை சுவருடன் சாய்த்து, தலைகீழாக நிற்க வைத்து அடிக்கத் துவங்கினார். என் உள்ளங்காலில் இருந்து உடலெங்கும் பரவி ஓடிய இரத்த ஓட்டம் என் உச்சந்தலையை நோக்கி விரைந்தது போன்ற கடுமையான தலைவலி, சிறிது நேரத்தில் நான் மயங்கி கீழே விழுந்தேன். காந்தன் பயன்படுத்திய ஒயர்லெசு செட் என்னிடம்தான் இருக்கிறது என யாரோ கூறியிருக்கிறார்கள் எனக் கூறி அந்த ஒயர்லெசு செட் எங்கே எனக் கேட்டு, ஆய்வாளர் செல்லத்துரை, டி.எஸ்.பி. சிவாஜி, விஜயக்குமார் ஆகியோர் மயக்கத்தில் இருந்த என்னை மீண்டும் அடித்தார்கள். எனக்கு முன்பின் தெரியாத ஒருவரை அழைத்து வந்து, அந்த ஒயர்லெசு செட் பற்றி எனக்கும் அவருக்கும் தான் தெரியும் எனக் கூறி விசாரித் தார்கள். அவர் என்னைப் பார்த்துவிட்டு, இவரை யார் என்றே தெரியாது எனக் கூறினார். உடனே அதிகாரிகள் என்னை, அவரை அடிக்கச் சொன்னார்கள். நான் முடியாது என மறுத்தேன். இவர்கள் மீண்டும் அடிக்கத் துவங்கினார்கள், நான் மீண்டும் மயங்கினேன்.

இத்தனை சித்திரவதைகளுக்கு மத்தியிலும் எனக்குக் குடிக்கத் தண்ணீர்த் தரக் கூடாது என்பதில் அதிகாரிகள் மிகத் தெளிவாக இருந்தார்கள். தாகம் என்றால், நீங்கள் நினைப்பது போல் ஒரு குவளை நீர் அருந்தினால் தணிந்து விடும் தாகம் அல்ல. ஏற்கெனவே உடலெங்கும் வற்றியிருந்த நீர்ச்சத்தினால் உடலில் நீர் வடிவங்களாக இருக்கின்ற, எச்சில், உதிரம் போன்றவற்றை உடல் தானாகவே கிரகிக்கத் துவங்கும். இதனால் கடுமையான சோர்வும், தசை இடுக்குகளில் இருக்கின்ற நீர்ச்சத்துக் குறையத் தொடங்கியவுடன் ஏற்படும் உடல்வலி போன்றவை உயிரை வாட்டி எடுக்கும். அதைத்தான் நான் தாகம் என்ற ஒற்றைச் சொல்லில் உங்களிடம் கூறியிருக்கிறேன்.”

(நூல்: ‘விடுதலைக்கு விலங்கு’)

இந்த வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் டி.ஆர். கார்த்திகேயன், ‘ராஜீவ் காந்தி படுகொலை புலனாய்வு’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் ‘தடா’ சட்டம் தான் தங்கள் விசாரணைக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு என்பதை ஒப்புக் கொள்கிறார்.

“ராஜீவ் படுகொலை வழக்கில், தடா சட்டம் பயன்படுத்தப்பட்டதால், சாதாரணமாய் வழக்குகளை விசாரிக்கும் போலீசுக்குக் கிடைக்காத சில செளகரியங்கள் கிடைத்தன. கோர்ட்டின் அனுமதியுடன் அறுபது நாட்கள் வரை, குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரணை செய்ய முடியும். (வழக்கமாக இது 15 நாட்கள்)

இந்திய சாட்சிய சட்டப்படி போலீஸ் அதிகாரியிடம் குற்றம்சாட்டப் பட்டவர்கள் கொடுக்கும் ஒப்புதல் வாக்கு மூலம் அங்கீகரிக்கப்படுவதில்லை. விதிவிலக்காக போலீஸ் காவல் துறை அதிகாரியிடம், சாகும் தருவாயில் கொடுக்கப்படும் வாக்குமூலங்களும், ஒப்புதல் வாக்கு மூலங்களில் ஒரு தடயம் கண்டுபிடிக்கப்படுமானால் அத்தகைய பகுதி மட்டும் அமைந்தன. ஆனால், தடா சட்டத்தில் காவல் துறை கண்காணிப்பாளர் தகுதியிலுள்ள அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிலுள்ள அதிகாரிகள், ஒப்புதல் வாக்கு மூலம் பதிவு செய்தால் அதை வழக்குகளின் சாட்சியங்களாக அனுமதிக்கப்படும்.”

(நூல்: ராஜீவ் படுகொலை – புலனாய்வு – கார்த்திகேயன்)

இப்படி தடா சட்டம் தான் தங்களுக்கு சவுகரியங்களை ஏற்படுத்தித் தந்தது என்று ஒப்புக் கொள்கிறார் கார்த்திகேயன். ‘தடா’ சட்டப்படி குற்றம்சாட்டப் பட்டவர்கள் தான் தங்களை நிரபராதிகளாக நிரூபித்துக் கொள்ள வேண்டும். விசாரணை நடத்துவோருக்கு எந்த முறைகேடுகளையும் செய்யும் சட்ட வாய்ப்புகள் உண்டு. இப்படித்தான் ஒரு நாட்டின் மிகப் பெரும் தலைவர் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையின் சட்டங்கள், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துவிட்டு, நடந்து முடிந்திருக்கிறது.

No comments:

Post a Comment